1000 ரூபாய் வர்த்தமானியை எதிர்த்து மனு

1000 ரூபாய் வர்த்தமானியை இரத்து செய்க - தோட்ட நிறுவனங்கள் மனு

by Chandrasekaram Chandravadani 22-03-2021 | 5:50 PM
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. இந்த மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நெருக்கடி நிலையில் நடத்திச் செல்லப்படுகின்ற பெருந்தோட்ட நிறுவனங்களை அரசாங்கத்தின் வர்த்தமானி காரணமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மனுவில் தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இதேவேளை, இலாபத்தை மறைத்து 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்காதிருக்கும், தோட்டக் கம்பனிகளின் முயற்சியை கண்டிப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.