சுற்றாடல் அழிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

by Bella Dalima 20-03-2021 | 8:34 PM
Colombo (News 1st) ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடலின் மற்றுமொரு கட்டம் இன்று நுவரெலியா - வலப்பனையில் இடம்பெற்றது. இதன்போது, சுற்றாடல் அழிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்தார். தாம் சுற்றாடலை நேசிப்பதாகவும் ஒருபோதும் அழிக்க விரும்பியதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யுத்தத்தின் பின்னர் கொழும்பில் குப்பைகள் குவிந்திருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளை தாம் செழிப்பாக்கியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மரங்களை நட்டு, பூங்காக்களை உருவாக்கி, ஈர வலயங்களை பாதுகாத்து, வௌ்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தியதாகவும் ஜனாதிபதி கூறினார். அன்று சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் குப்பை மேடு காணப்பட்டதாகவும் இன்று அது பூங்காவாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறெல்லாம் சுற்றாடலைப் பாதுகாத்த தம்மை இன்று பலரும் தூற்றுவதாக ஜனாதிபதி கூறினார். நேற்று (19) விஹாரமகா தேவி பூங்கா முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறு பாரிய பதாகைகளை ஏந்தி சுற்றாடலைப் பாதுகாக்க முடியாது என குறிப்பிட்டார். அனைத்து கிராமங்களுக்கும் வீதிகள் அவசியம் என கூறிய ஜனாதிபதி, வீதிகளை அமைத்துக் கொடுக்காவிடின் அங்குள்ள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள் என கேள்வி எழுப்பினார். பரம்பரை பரம்பரையாக பயிர்செய்கை செய்த நிலங்களை அரசாங்கம் கொள்ளையிட்டுள்ளதாக கிராம மக்கள் சிலர் தம்மிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு ஜீவராசிகள் திணைக்களத்திற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் காரணமாக தாம் காடுகளை அழிப்பதாக தம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். இதேவேளை, ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி பின்வருமாறு கருத்துக் கூறினார்,
ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது. நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன். அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்