போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும்

by Staff Writer 19-03-2021 | 9:17 PM
Colombo (News 1st) போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கி கல்வி அமைச்சின் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த தீர்மானத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஊர்வலமாக அவ்விடத்தை வந்தடைந்ததை அடுத்து, அவ்வாறான நிலைமை உருவானது. அதிபர்களை இணைத்துக்கொள்ளும் புதிய செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர்கள், நிர்வாக சங்கங்கள், ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கல்வி அமைச்சின் முன்பாக இன்று பகல் ஒன்றுகூடினர். அப்போது அவ்விடத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகள் கூடியிருந்தனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. தாம் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானிக்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்த பின்னர் அவர்கள் விலகிச் சென்றனர்.