ரஞ்சனின் மனு: வாய்மொழி மூல சமர்ப்பணங்கள் நிறைவு

ரஞ்சன் ராமநாயக்கவின் மனு தொடர்பில் வாய்மொழி மூல சமர்ப்பணங்கள் நிறைவு

by Staff Writer 18-03-2021 | 5:28 PM
Colombo (News 1st) தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் இரு தரப்பினரும் வாய்மொழி மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்துள்ளனர். மனுதாரர் மற்றும் பிரதிவாதி தரப்பு சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பித்து குறித்த மனுவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதியளிப்பதா, இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதியை தீர்மானிப்பதற்காக மனுவை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று தீர்மானிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரேயா உள்ளிட்டோர் முன்னிலையில் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேமுனி டி சில்வா மற்றும் மனுதாரர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஃபயிஸ் முஸ்தபா ஆகியோர் இன்று வாய்மொழி மூல சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

ஏனைய செய்திகள்