அயோத்தி ஶ்ரீராமர் கோவிலுக்காக சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட அடிக்கல் கையளிப்பு

by Staff Writer 18-03-2021 | 1:29 PM
Colombo (News 1st) அயோத்தி ஶ்ரீராமர் கோவிலுக்காக நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் கற்பக்கிரகத்தில் பூஜிக்கப்பட்ட அடிக்கல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இன்று (18) வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. கொழும்பு ஶ்ரீ மயூரபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஶ்ரீ கோபால் பாக்லே, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொட, சீதையம்மன் ஆலயத்தின் அறங்காவலர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.பி. தேவராஜ், மயூரபதி ஆலய அறங்காவலர் எஸ். சுந்தரலிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன்போது இந்தியாவின் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஶ்ரீராமர் கோவிலின் திருப்பணிக்கு அனுப்பும் பொருட்டு சீதாஎலியவிலிருந்து எடுக்கப்பட்டு கொழும்பு மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட புராதனக் கருங்கல் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.