தலைமன்னார் ரயில் - பஸ் விபத்து தொடர்பில் இருவர் கைது 

by Staff Writer 17-03-2021 | 1:14 PM
Colombo (News 1st) தலைமன்னார் ரயில் நிலையத்தை அண்மித்த ரயில் கடவையில், ரயிலுடன் பஸ்ஸொன்று மோதிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் சாரதி மற்றும் ரயில் கடவையின் கடமை நேர காவலாளி ஆகியோர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த பஸ்ஸொன்று நேற்று (16) பிற்பகல் மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த 15 பேரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.