மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவி விலக திட்டம்

மியன்மாருக்கான இலங்கை தூதுவர் இராஜினாமா செய்ய தீர்மானம் 

by Staff Writer 15-03-2021 | 4:36 PM
Colombo (News 1st) மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர்களின் பிம்ஸ்டெக் மாநாடு இடம்பெறும் வரையிலும் தாம் பதவியில் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமது பிரத்தியேக Facebook பக்கத்தில் "வேலை செய்ய முடியாத தூதுவர்" என்ற தலைப்பில் பதிவொன்றை இட்டு பேராசிரியர் நலின் டி சில்வா தமது தீர்மானம் தொடர்பில் விடயங்களை தௌிவுபடுத்தியுள்ளார். இலங்கை மீனவர்கள் 12 பேர் தற்போது மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, பொலிஸ் அதிகாரி ஒருவரினூடாக ஒரே ஒரு நாள் மாத்திரம் மீனர்வகளுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார். தாம் ஒரு திறனற்ற, தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்பட மியன்மாரில் தமக்கு அறிமுகமானவர்கள் எவரும் இல்லை எனவும் அவரது Facebook பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, தமது தீர்மானம் தொடர்பில் Facebook பதிவில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்தார். எஞ்சியுள்ள தமது கடமைகளை நிறைவு செய்யும் வரையில், தாம் பதவியில் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தின் அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா மேலும் தெரிவித்தார்.