AL, புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

AL, புலமைப்பரிசில் பரீட்சைகளை ஆகஸ்ட்டில் நடத்தாதிருக்க தீர்மானம் 

by Staff Writer 14-03-2021 | 1:53 PM
Colombo (News 1st) இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆகியவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண பணிப்பாளர்களையும் Zoom தொழில்நுட்பத்தினூடாக இணைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் உரிய முறையில் பாடத்திட்டம் நிறைவு செய்யப்படாமையினால் ஆகஸ்ட் மாதத்தில் பரீட்சைகளை நடாத்துவது நியாயமற்றதென இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சைகளை நடாத்துவதற்கான காலம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.