மே மாதத்தில் சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை

மே மாதத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை

by Staff Writer 13-03-2021 | 3:53 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை மாணவர்களுக்கு பயிற்சிக்குரிய காலத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்தார். கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக மார்ச் 27 தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக 30,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 05 ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதுடன், இதற்காக 10,000 பேர் ஈடுபடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் தலைமை அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றும் நாளையும் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என அவர் கூறினார்.