புர்காவிற்கு தடை விதிக்கும் திட்டம்

புர்காவிற்கு தடை விதிக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக சரத் வீரசேகர தெரிவிப்பு

by Bella Dalima 13-03-2021 | 2:59 PM
Colombo (News 1st) நாட்டில் புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். களுத்துறையில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்கான உத்தரவில் நேற்று தாம் கையொப்பமிட்டதாகவும் புர்கா அணிவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார். மத அடிப்படைவாதிகளால் அண்மையில் புர்கா அறிமுகப்படுத்தப்பட்டதால், அதற்கு கட்டாயமாக தடை விதிப்பதாகவும் அவர் கூறினார். நாட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதரசா பாடசாலைகள் காணப்படுவதாகக் கூறிய அவர், 05 தொடக்கம் 16 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து பிள்ளைகளும் தேசிய கல்வி கொள்கைக்கு அமைய கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் அவசியம் எனவும் வலியுறுத்தினார். தேசிய கல்வி கொள்கைக்கு மாறான, பதிவு செய்யப்படாத மதரசாக்களுக்கும் தடை விதிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சரத் வீரசேகர கூறினார்.