இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு

by Staff Writer 13-03-2021 | 7:11 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இவர்களை கூட்டணி மற்றும் கட்சி ரீதியாக தனித்தனியாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்தமைக்கான புகைப்படங்கள், உயர்ஸ்தானிகராலய ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த கலந்துரையாடல்களில் யாழ். இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோருடன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துரையாடியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் தனியான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரும் இந்திய உயர்ஸ்தானிகருடன் தனி சந்திப்பில் ஈடுபட்டனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.