வடக்கில் வீட்டுத் திட்டங்களை பூர்த்தி செய்து தருமாறு செல்வம் அடைக்கலநாதன் கடிதம்

by Staff Writer 12-03-2021 | 6:00 PM
Colombo (News 1st) வடக்கில் முன்னைய ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டுமென வலியுறுத்தி பிரதமருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். நேற்றைய திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மன்னாரில் 2908 வீடுகளும் வவுனியாவில் 2861 வீடுகளும் முல்லைத்தீவில் 3501 வீடுகளும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வீடுகளின் நிர்மாணத்தினை பூர்த்தி செய்வதற்கு மன்னாருக்கு 1480.73 மில்லியன் ரூபாவும் வவுனியாவிற்கு 1245.362 மில்லியன் ரூபாவும் முல்லைத்தீவிற்கு 1592.265 மில்லியன் ரூபாவும் அவசியமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் தமது கையிருப்பிலுள்ள பணத்தைக் கொண்டு குறித்த வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய முன்னெடுத்த முயற்சி பலனளிக்கவில்லை எனவும் பிரதமருக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த வீடுகளை பூர்த்தி செய்வதற்கான நிலுவைத்தொகை கிடைப்பதற்கு ஆவண செய்யுமாறும் இந்தக் கடிதத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.