கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு கோரிக்கை

கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை

by Staff Writer 12-03-2021 | 3:53 PM
Colombo (News 1st) கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு முதலாளிமார் சம்மேளனம், தொழில் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலான தமது இறுதி தீர்மானத்தை திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். எவ்வாறாயினும், கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்வதால், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் கூறினார். கூட்டு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 2003 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டு ஒப்பந்தம் நடைமுறையிலுள்ளதுடன், இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஒரு தரப்பினர், ஒரு மாத கால அவகாசத்துடன் அதிலிருந்து வௌியேறுவதற்கான இயலுமை உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்