by Staff Writer 11-03-2021 | 1:19 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பாக 8 நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்கள், பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன், எஸ்டோனியா, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோரை துன்புறுத்தக்கூடாது என்பதுடன், அவர்களை பாதுகாக்க வேண்டும் என குறித்த நாடுகளின் தூதுவர்கள் கூட்டறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளனர்.
திறமை வாய்ந்த சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் மாதம் முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக மனித உரிமைகளுக்கான தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மனித உரிமைகளுக்காக போராடுபவர்களை, பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் எந்தவொரு நாட்டினதும் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறானோரை பாதுகாப்பது அனைத்து அரசாங்கங்ளின் பொறுப்பாகும் எனவும் அவர்களை துன்புறுத்தலாகாது எனவும் 8 நாடுகளின் மனித உரிமைகளின் தூதுவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.