மேற்கிந்தியதீவுகள் அணி 8 விக்கெட்களால் வெற்றி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றி

by Staff Writer 11-03-2021 | 8:54 AM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் 08 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அன்டிகுவா சேர் விவியன் ரிச்சட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி சார்பாக அசேன் பண்டார மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் நேற்றைய போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்றனர். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் முதல் விக்கெட்டில் 105 ஓட்டங்களை பகிர்ந்தனர். தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களை பெற்றார். பின்வரிசையில் அசேன் பண்டார 50 ஓட்டங்களை பெற்றார். தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை. இலங்கை அணி 49 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் சார்பாக இவின் லுவிஸ் 65 ஓட்டங்களை பெற்றார். நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஷேய் ஹோப் சதம் விளாசிய நிலையில் 110 ஓட்டங்களை விளாசினார். இவின் லுவிஸும் ஷேய் ஹோப்பும் முதல் விக்கெட்டில் 143 ஓட்டங்களை பகிர்ந்து மேற்கிந்தியதீவுகளின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர். மேற்கிந்தியதீவுகள் 47 ஓவர்களில் 02 விக்கெட் இழப்புக்கு வெற்றியிலக்கை கடந்தது. போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை ஷேய் ஹோப் வென்றார்.