ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் உண்மையை வௌிப்படுத்துமாறு கோரி மகா சங்கத்தினர் சத்தியாகிரகம்

by Staff Writer 11-03-2021 | 8:20 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மகா சங்கத்தினர் கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று சங்கத்தினரும் இணைந்து மேற்கொண்ட இந்த சத்தியாகிரக போராட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையில் வௌிப்படுத்தப்பட்டிருக்கும் பௌத்த அமைப்புகள், அவற்றின் தலைவர்களை மௌனிக்க வைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரிக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் இந்த சத்தியாகிரகம் முன்னெடுக்கப்பட்டது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை மாவட்ட ரீதியில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், பாகிஸ்தான் கொடியுடன் சிலர் சுதந்திர சதுக்கத்திற்கு சென்றிருந்தனர். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் கொண்டாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சுதந்திர சதுக்கத்திற்கு வந்ததாக இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தொலைபேசியில் ஒருவருடன் பேசுவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்த பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.