உலகில் 10 வீதமானோருக்கு சிறுநீரக பாதிப்பு

உலக சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு

by Bella Dalima 11-03-2021 | 5:18 PM
Colombo (News 1st) உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை ''சிறுநீரக பாதுகாப்பு அனைவருக்கும் அனைத்து பகுதிகளுக்கும்'' எனும் தொனிப்பொருளில் சிறுநீரக தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. குடிப்பழக்கம் , புகைப்பிடித்தல் மற்றும் ஒழுக்கமற்ற உணவு நடைமுறை சிறுநீரக நோயை ஊக்குவிப்பினும் சுத்தமான குடிநீர் இன்மை சிறுநீரக பாதிப்பிற்கான பிரதான காரணியாகும். மனிதர்களின் மரணத்திற்கு காரணமான நோய்களில் 6 ஆவது இடத்தில் சிறுநீரக செயலிழப்பு உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. உலக சனத்தொகையில் 10 வீதமானவர்கள் சிறுநீரகப் பாதிப்பிற்கு முகம் கொடுப்பதுடன், அவர்களில் மில்லியன் கணக்கானவர்கள் வருடந்தோறும் உயிரிழக்கின்றனர். உலக சுகாதாரத் தரப்படுத்தலில் சிறுநீரக நோய் பாதிப்பு தொடர்பான பட்டியலில் இலங்கை 61 ஆவது இடத்தில் உள்ளதுடன், அபாயம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 850 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோய்ப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்களை விட இரு மடங்காகவும் புற்றுநோய் மற்றும் எயிட்ஸால் பாதிக்கப்படுபவர்களை விட 20 மடங்காகவும் காணப்படுகின்றது.