வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 09-03-2021 | 5:35 PM
Colombo (News 1st) சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து இன்று 10 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்றைய போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் ஆரம்பமான உணவு தவிர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. அம்பாறை - கல்முனை பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக 5 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.