டாம் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தின் DNA பரிசோதனை அறிக்கை வௌியானது 

by Staff Writer 09-03-2021 | 9:28 AM
Colombo (News 1st) கொழும்பு - டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம், குருவிட்டை - தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென மரபணு பரிசோதனையில் (DNA) உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணின் சடலம் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட போதிலும், தலையின்றி சடலம் காணப்பட்டமையால் சந்தேகத்திற்கிடமின்றி ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு மாதிரிகள், அவரின் தாய் மற்றும் சகோதரர்களின் மாதிரிகளுடன் ஒத்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் துண்டிக்கப்பட்ட தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். சடலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கொழும்பு - டாம் வீதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து கடந்த முதலாம் திகதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் மறுநாள் மொனராகலை படல்கும்புற பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.