அசோக் அபேசிங்கவை இன்று CID இல் ஆஜராகுமாறு அழைப்பு

அசோக் அபேசிங்கவை இன்று CID இல் ஆஜராகுமாறு அழைப்பு

by Staff Writer 09-03-2021 | 7:59 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (09) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளுக்கு நிதி கிடைத்த விதம் குறித்து குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அந்த கருத்து தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அந்த முறைப்பாட்டிற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.