அரச வாழ்க்கை தற்கொலைக்கு தூண்டியது: மேகன்

பிரித்தானிய அரச குடும்ப வாழ்க்கை தற்கொலைக்கு தூண்டியது - சீமாட்டி மேகன் 

by Staff Writer 08-03-2021 | 3:07 PM
Colombo (News 1st) பிரித்தானிய அரச குடும்பத்தில் தாம் கழித்த நாட்கள் மிகவும் கடினமானவை எனவும் அவை தன்னை தற்கொலை எண்ணத்திற்கு தூண்டியதாகவும் சீமாட்டி மேகன்  தெரிவித்துள்ளார். பிரபல தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரியுடன் பங்கேற்ற மேகன் மேர்கல் இதனை கூறியுள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பில் தாம் ஹரியிடம் கூறுவதற்கு வெட்கப்படுவதாகவும், காரணம் அவர் "சந்தித்த இழப்புகள்" அவ்வளவு அதிகம் எனவும் மேகன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனைகளைப் பெற அமைப்பொன்றின் உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹரி, மேகன் ஆகியோர் தமது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். அடிப்படையில், ஹரியும் மேகனும் இன்னமும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தாலும் கடந்த மாதம் இவர்கள் இருவரும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகிய இரண்டு மணித்தியால நேர்காணலில் ஹரி, மேகன்  இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் தொடர்பில் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினர் தன்னை பொருளாதார ரீதியில் முற்றாக கைவிட்டதாகவும் தனது பாதுகாப்புக்கு தானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இளவரசர் ஹரி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.