பாட்டலி மீதான வழக்கு; 31 ஆம் திகதி சாட்சி விசாரணை

பாட்டலி சம்பிக்க உள்ளிட்டோர் மீதான வழக்கின் சாட்சி விசாரணைக்கான திகதி அறிவிப்பு 

by Staff Writer 08-03-2021 | 4:33 PM
Colombo (News 1st) பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிம் தொடவத்த முன்னிலையில் இந்த வழக்கு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இரவு, இராஜகிரிய பகுதியில் சந்தீப் குணவர்தன என்ற இளைஞரை விபத்துக்குள்ளாக்கி, அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்காது தப்பிச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி சாட்சியமளிக்க வருகை தருமாறு முறைப்பாட்டு தரப்பின் ஒன்று தொடக்கம் ஐந்தாம் இலக்க சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் 20 ஆம் இலக்க சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, நிதி அமைச்சின் செயலாளரையும் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பில் அடிப்படை ஆட்சேபனையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.