ஒரு தொகை போதைப்பொருட்களுடன் இலங்கை படகுகள் 3 கைப்பற்றப்பட்டன

by Staff Writer 08-03-2021 | 2:53 PM
Colombo (News 1st) இந்தியாவின் கேரள கடற்பரப்பில் 200 கிலோகிராம் ஹெரோயின், 60 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் இலங்கையின் மூன்று படகுகளை இந்திய கரையோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த மூன்று படகுகளும் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இந்திய கரையோர காவல்படைக்கு சொந்தமான வர்ஷா கப்பலிலிருந்த அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். படகுகளில் இருந்த 19 பேரை இந்திய கரையோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். ஆகர்ஷா துவ, சத்துராணி - 03 மற்றும் சத்துராணி - 08 ஆகிய படகுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இலட்சதீவிற்கு மேற்கே சுமார் 400 கடல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகிலிருந்து போதைப்பொருட்களை கடத்தியதாக ஆகர்ஷா துவ என்ற படகிலிருந்தவர்கள் தெரிவித்ததாகவும் த ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.