சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல ஜயசேகர காலமானார்

by Bella Dalima 05-03-2021 | 7:26 PM
Colombo (News 1st) முன்னாள் இராஜதந்திர அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல ஜயசேகர தனது 60 ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார். நாளாந்தம் காலை 6 மணிக்கு சிரச தொலைக்காட்சில் நியூஸ்ஃபெஸ்ட் பெத்திகட நிகழ்ச்சியின் ஊடாக, குரலற்ற மக்களின் குரலாக தனது ஊடகப் பணியை முன்னெடுத்த அன்னார் சமூக, பொருளாதார, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புகளில் மக்களின் தகவல் அறிந்துகொள்கின்ற உரிமையை உறுதிப்படுத்தினார். 1960 டிசம்பர் 29 ஆம் திகதி குருணாகலில் பிறந்த பந்துல ஜயசேகர கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவராவார். புது டெல்லியில் சேர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பாடல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர், இராஜதந்திர அதிகாரியாக கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சேவையாற்றியுள்ளார். டெய்லி நியூஸ் பத்திரிகையில் சிறிது காலம் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பந்துல ஜயசேகர, தி ஐலன்ட் பத்திரிகையில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பின்னர் சிரச ஊடக வலையமைப்புடன் இணைந்த அவர், இலத்திரனியல் ஊடகம் மூலம் மக்களை நெருங்கினார். பெத்திகட நிகழ்ச்சியினூடாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பந்துல ஜயசேகர தவறவில்லை. சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல ஜயசேகர, சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்று திரும்பிய பின்னரும் நிகழ்ச்சிகளை முன்னளிக்கை செய்யத் தவறவில்லை. சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்வதற்கு அச்சமடையாத அவர், பல்வேறு துறைகள் தொடர்பாக ஆழமான அறிவும் தௌிவான சிந்தனையும் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் சமூகப் பணியாற்றத் தவறவில்லை. புற்றுநோயாளர்களின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பந்துல ஜயசேகர, நோயுற்ற மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வே பந்துல ஜயசேகர இறுதியாகப் பங்கேற்ற நிகழ்வாகும். கராப்பிட்டி நோய் நிவாரண மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே பந்துல ஜயசேகர காலமானார். பூதவுடல் பொரளை A.F.ரேமன்ட் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் நாளை (06) பிற்பகல் 3 மணிக்கு பொரளை மயானத்தில் நடைபெறவுள்ளன.