நாடு தொடர்பான பிரேரணை குறித்த வௌிப்பாடு

இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடலின் வௌிப்பாடு

by Staff Writer 04-03-2021 | 6:57 PM
Colombo (News 1st) இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில், கடுமையான சொற்பதங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என மேற்கு ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய நாடுகள் அணி, அண்மையில் நடைபெற்ற உத்தியோகபற்றற்ற கலந்துரையாடலின் போது வலியுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மார்ச் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இந்த உத்தியோகபற்றற்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லீச்டென்ஸ்டைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளின் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சொற்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என இந்த நாடுகள் திட்டமிட்ட வகையில் வலியுறுத்தியுள்ளதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தில் குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைப்பு அல்லது EXTRADITION என்ற சொல்லை உள்ளடக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றஞ்சுமத்தி சிலரை பெயரிடுவதையும் இலங்கையை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ள சீனா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.