by Staff Writer 03-03-2021 | 7:39 AM
Colombo (News 1st) இரத்தினபுரி - குருவிட்டை, தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மொனராகலை, படல்கும்புர ஐந்தாம் கட்டை பகுதியிலுள்ள வீட்டிற்கு அருகே காணப்படும் வனப் பகுதியிலிருந்து இன்று (03) காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசாரணைகளுக்காக குறித்த நபரின் வீட்டிற்கு பொலிஸார் சென்றிருந்த வேளை, சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், அந்த பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தின் அருகில் நஞ்சுப் போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
52 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஹங்வெல்ல பகுதியிலுள்ள தங்குமிடமொன்றில் வைத்து பெண்ணை கொலை செய்து சடலத்தை பயணப் பையில் வைத்து பஸ்ஸில், கொழும்பு - டாம் வீதி பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
CCTV காட்சியூடாக இவை உறுதி செய்யப்பட்டதுடன், 30 வயதான யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவே இந்த கொலைக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.