கிராம உத்தியோகத்தர் கொலை வழக்கு விசாரணை 

மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தர் கொலை: மேலதிக விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

by Staff Writer 03-03-2021 | 4:44 PM
Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், மேலதிக விசாரணை அறிக்கையும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் மருத்துவ ஆய்வறிக்கையும் தடயப்பொருட்கள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையும் மன்றுக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியால் இன்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும், இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜயேந்திரன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி தாக்கி கொலை செய்யப்பட்டார்.