இலங்கை - இந்திய விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் கூட்டாக சாகசம்

by Staff Writer 03-03-2021 | 8:18 PM
Colombo (News 1st) இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமான சாகச நிகழ்வுகள் இன்று மாலை கொழும்பில் ஆரம்பமாகின. கொழும்பு காலிமுகத்திடலில் விமானப் படையினரின் விமான சாகசங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையை அடுத்து ஆரம்பமாகின. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அமெரிக்காவின் இந்து பசுபிக் வலய விமானப்படைத் தளபதிகள் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர். பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை விமானப் படையின் அழைப்பின் பேரில் இந்திய விமானங்களும் விமான சாகச நிகழ்வில் பங்கேற்றிருந்தன. இலங்கை விமானப்படையின் Bell 212 மற்றும் Bell-412 ஆகிய ஹெலிகொப்டர்கள் கொழும்பு நகரை சுற்றிப் பறந்து விமான சாகசத்தை ஆரம்பித்து வைத்ததுடன், 70 வருட பெருமை மற்றும் வலிமையை எடுத்தியம்பின. அதன் பின்னர் கொழும்பு வான் பரப்பில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. இந்த விமான சாகசத்தில் 23 இந்திய விமானங்கள் பங்கேற்றிருந்தன. காலி முகத்திடலிற்கு மேலான வான் பரப்பில் சூரிய கிரண் சாகச அணியின் 9 விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. இதனைத் தவிர, இந்தியாவின் Sarang ஹெலிகொப்டர்கள் நான்கும் இதில் பங்கேற்றிருந்தன. Y-12 இலகு ரக விமானம் , MA 60, F-07 ஜெட் விமானங்களும் வான்பரப்பில் சாகசத்தை நிகழ்த்தின. இந்த விமான சாகசத்தை நாளையும் (04) நாளை மறுதினமும் (05) மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை காலி முகத்திடலின் வான் பரப்பில் காண முடியும்.