சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். சண்முகராஜா காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். சண்முகராஜா (ஷண்) காலமானார்

by Staff Writer 02-03-2021 | 5:39 PM
Colombo (News 1st) பத்திரிகை உலகில் 'ஷண்' என அனைவராலும் அழைக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். சண்முகராஜா காலமானார். 55 வருடங்களுக்கு மேல் பத்திரிகை உலகில் கோலோச்சிய சண்முகராஜா தனது 85 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் நேற்று (01) காலை காலமானார். 1935 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த சண்முகராஜா யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். 1955 ஆம் ஆண்டு முதல் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகராஜா, 1966 ஆம் ஆண்டு தினபதி, சிந்தாமணி, சூடாமணி பத்திரிகைகளில் முழுநேர ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியம், சினிமாத்துறை, தமிழக அரசியல் என பல்வேறு பரிணாமங்களில் தமது ஊடகப் பணியை ஷண் எனும் புணைப்பெயரில் முன்னெடுத்திருந்தார். பத்திரிகைத்துறையில் நீண்டகாலம் சேவையாற்றியதற்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் 2008 ஆம் ஆண்டு இணைந்து நடத்திய விருது வழங்கல் விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்ததுடன், அரசினால் கலாபூஷணம் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.