வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டதன் பின்னரே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் 

by Staff Writer 27-02-2021 | 6:14 PM
Colombo (News 1st) கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குரிய வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டதன் பின்னரே, அனுமதி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். உடல்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை எதிர்வரும் நாட்களில் தெரிவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நீர் நிலைகள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து இடங்களை தெரிவு செய்ததன் பின்னர் அதனை சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான COVID செயலணிக்கு சமர்ப்பித்து, அதற்கு அனுமதி பெற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் கூறினார். இதற்கான வழிகாட்டியை வௌியிடும் வரை COVID-இனால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது எனவும், இடத்தை தெரிவு செய்ய வேண்டியிருப்பதே அதற்கான பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். அதுவரை உடல்களை வைத்தியசாலைகளின் குளிரூட்டிகளில் வைத்திருக்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்