நல்லடக்க முறைமை தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு

நல்லடக்கம் செய்யும் முறைமை தொடர்பில் அடுத்த வாரத்தில் அறிவிப்பு

by Staff Writer 27-02-2021 | 2:37 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முறைமை தொடர்பில் அடுத்த வாரத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் விசேட நிபுணர்கள் குழுவின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட நல்லடக்க முறைமை கட்டமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். நீர் ஆதாரங்கள் காணப்படும் பகுதிகள், அதற்கான தூரம், அடக்கத்திற்கு தெரிவு செய்யப்படும் குழியின் ஆழம், உடல்களை கொண்டு செல்லும் முறைமை மற்றும் கொண்டு செல்லும்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உடல்களை அடக்கம் செய்யக்கூடிய இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கை துரிதமாக இடம்பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இதனிடையே, உயிரிழப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்கும் விசேட வர்த்தமானி கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.