உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை குறைப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரு வருடமாகக் குறைப்பு

by Staff Writer 26-02-2021 | 6:06 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட 18 மாதங்கள் தடை ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்தினால் இந்தத் தடைக்குறைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனத்தின் ஒழுக்காற்றுக்குழுவினால் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் விதிக்கப்பட்ட தடை தற்போது காலாவதியாகியுள்ளது. இருப்பினும் உமர் அக்மலுக்கு 4.25 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புனர்வாழ்வு திட்டத்தில் பங்கேற்று அதனை பூர்த்தி செய்ததன் பின்னர் அவர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டித்தொடரின் போது, ஊழல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அணுகல்களை அறிக்கையிடவில்லையென்ற குற்றத்திற்காக உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் போட்டித்தடை விதிக்கப்பட்டது. இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் போது, தண்டனைக்காலம் அரைவாசியாகக் குறைக்கப்பட்டது. தமது 18 வயதில், 2009 ஆம் ஆண்டு கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகிய உமர் அக்மல், 16 டெஸ்ட், 121 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 84 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார். உடற்தகுதியை நிரூபிக்கத் தவறியமை உட்பட பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தரை விமர்சித்த குற்றத்திற்காக 2017 ஆம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் விளையாடாதிருந்த அவர் 2019 ஆம் ஆண்டில் மீளவும் அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் அவர் ஓட்டமின்றி ஆட்டமிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.