தங்காபரண விற்பனை நிலையத்தில் கொள்ளை: 7 பேர் கைது

திருகோணமலையில் தங்காபரண விற்பனை நிலையத்தில் கொள்ளை: 7 பேர் கைது

by Staff Writer 26-02-2021 | 2:49 PM
Colombo (News 1st) திருகோணமலையில் தங்காபரண விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நிலையத்திலிருந்து 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்காபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேகநபர்கள் கொள்ளையடித்த நகைகளை மீட்கும் நோக்கில் தேடுதல் நடவடிக்கை தொடர்வதாகவும் அவர் கூறினார். திருகோணமலை - கோணேஸ்வரத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள தங்காபரண விற்பனை நிலையம் சந்தேகநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதுடன், அவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். திருகோணமலையில் வசிக்கும் 35 வயதான சந்தேகநபர், இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரென அவர் கூறினார். சந்தேகநபரிடமிருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 6 ரவைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.