ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் பிரதமர்

by Staff Writer 24-02-2021 | 12:37 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கு இடையில் இன்று (24) கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர், கொழும்பில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டார். இன்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ள இம்ரான் கான், பின்னர் பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று (23) மாலை 4 மணியளவில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.