ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் 

by Staff Writer 23-02-2021 | 6:43 AM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (22) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாரானதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டிருந்தார். எனினும், இன்று (23) முற்பகல் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை போக்குவரத்து அமைச்சர் வழங்கியுள்ளதாக அவர் கூறினார். தங்களின் கோரிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடி, தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என போக்குவரத்து அமைச்சர் தொலைபேசியூடாக நேற்றிரவு அறிவித்ததாக இந்திக தொடங்கொட தெரிவித்தார். அதற்கமைய, இன்று முற்பகல் 11.30 மணியளவில் கலந்துரையாடல் ஆரம்பிக்கவுள்ளமையால் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார். சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இரு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே தொழிற்சங்கத்தினர் தீர்மானித்திருந்தனர். இந்திய கடன் திட்டத்தின் கீழ், மாஹோவியிலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தை விஸ்தரிக்கும் திட்டம் மற்றும் சீன நிறுவனத்தினால் ரயில் பற்றுச்சீட்டு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருந்ததாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்திருந்தார்.