முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அனுமதி

முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி 

by Staff Writer 23-02-2021 | 1:14 PM
Colombo (News 1st) திறைசேரி செயலாளரின் தலைமையில் முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளரின் தலைமையிலான இந்த குழுவில், தொடர்புடைய அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் முதலீட்டு சபையின் தலைவரும் உள்ளடங்குகின்றனர். முதலீட்டு யோசனைகளுக்கு துரித அனுமதியை வழங்குதல், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியன இந்த குழுவினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்குவதற்கு நீண்ட காலப்பகுதி தேவைப்படுவதாக குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கால தாமதத்தை குறைத்து முதலீடுகளுக்கான துரித அனுமதியை வழங்கும் பொருட்டு, முதலீட்டு முகாமைத்துவக் குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.