தோட்டங்களில் தொடரும் குளவிக் கொட்டு அவலங்கள்

by Staff Writer 23-02-2021 | 1:56 PM
Colombo (News 1st) தலவாக்கலை - கிரேக்வெஸ்டன் தோட்டம் கல்பா பிரிவில் 12 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். அவர்களில் 06 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கிரேக்வெஸ்டன் தோட்டம் கல்பா பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே இன்று (23) காலை 9 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தோட்டத்தில் தொழில் புரிந்துகொண்டிருந்த 2 ஆண்களும் 10 பெண்களுமே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்காகியும் எவ்வித வாகன வசதியும் இன்றி பெரும் சிரமத்திற்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கிரேக்வெஸ்டன் தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.