பயிற்றுநர் பதவியிலிருந்து விலகினார் சமிந்த வாஸ் 

பயிற்றுநர் பதவியிலிருந்து விலகினார் சமிந்த வாஸ் 

by Staff Writer 22-02-2021 | 10:33 PM
Colombo (News 1st) மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்றுநராக நியமிக்கப்பட்டிருந்த சமிந்த வாஸ் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரரும் பந்துவீச்சாளர்களுக்கான ஆலோசகருமான சமிந்த வாஸ், மார்ச் 26 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பயிற்றுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இன்று (22) இரவு மேற்கிந்திய தீவுகளை நோக்கி புறப்படுவதற்கு தயாராகியிருந்த நிலையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு உலகமும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், தமது தனிப்பட்ட நலனுக்காக இத்தகைய பொறுப்பற்ற அவசர தீர்மானத்தை சமிந்த வாஸ் எடுத்துள்ளமை தொடர்பில் கவலையடைவதாக கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, சமிந்த வாஸ் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்கு செய்த சேவையை பாராட்டுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கெட் விஜயத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்குவதற்கு இணங்கிய கட்டணத்தை விட கூடுதலான தொகையை அவர் கோரியதால் இந்த நிலைமை உருவானதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட தொகையில் போட்டிகளின்போது கிடைக்கும் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமிந்த வாஸின் அனுபவங்கள் தொடர்பில் கருத்திற்கொண்டே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது வழங்கவேண்டிய கட்டணம் தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் வினயமாக விடுத்த வேண்டுகோளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகரித்ததாக சமிந்த வாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஏதோ ஒரு நாளில் நியாயம் வெற்றிபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.