கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் 

by Staff Writer 22-02-2021 | 6:48 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் காணாமற்போன இரு மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிப் படகில் பயணித்த இரு மீனவர்கள் நேற்று (21) மாலை முதல் காணாமற்போயுள்ளனர். நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானுக்கு மீன், நண்டு உள்ளிட்டவற்றை நேற்று காலை  ஏற்றிச் சென்ற இரு மீனவர்களும் அங்கிருந்து நேற்று பகல் திரும்பியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். மாலையாகியும் மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில், படகு மாத்திரம் நெடுந்தீவு கிழக்கு அந்தோனியார் கோவில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இதனையடுத்து, காணாமற்போன இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் இணைந்து நேற்றிரவு முதல் மீனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுந்தீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதான ஞானசிங்கம் ரொபின்சன் மற்றும் 20 வயதான மரியவேதநாயகம் நேசன் ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர். காணாமற்போன இருவரையும் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய செய்திகள்