COVAX திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 3 இலட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன

by Staff Writer 20-02-2021 | 7:48 PM
Colombo (News 1st) COVAX திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த தடுபூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித அபேகோன் தெரிவித்தார். COVAX திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 40 இலட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில், 3 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகள், இந்தியாவின் Serum நிறுவனத்தில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, COVAX திட்டத்தின் முதல் கட்டத்தினூடாக 16 இலட்சம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ள 16 இலட்சம் தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு விநியோகிக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. AstraZeneca தடுப்பூசிகளை ஆறு மாதங்களுக்கு மாத்திரமே களஞ்சியப்படுத்த முடியும் என்பதால், கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. COVID-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆவணங்களை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கடந்த 18 ஆம் திகதி அனுப்பியுள்ளதாக அரச ஔடத கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளில் கொரோனா தடுப்பிற்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், Oxford AstraZeneca தடுப்பூசிக்கு மாத்திரமே இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏதேனும் மருந்துகள் அல்லது, தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டுமாயின் அதற்கு ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியைப் பெறல் அவசியமாகும்.