விவசாயக் காணிகளை விடுவிக்குமாறே கூறினேன், காடழிப்பிற்கு இடமளிக்கவில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 20-02-2021 | 8:06 PM
Colombo (News 1st) கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 11 ஆம் கட்டம் புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் - முரியாகுளம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி முதலில் சென்றிருந்தார். அதனையடுத், கருவலகஸ்வெவ பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது, காணிப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பின்வருமாறு தெரிவித்திருந்தார்,
வன ஜீவராசிகள், வனவளத் திணைக்களங்களினால் எல்லைக் கற்கள் இடப்பட்டபோது ஏற்பட்ட தவறுதல்களால் பரம்பரை பரம்பரையாக விவசாய செய்கை முன்னெடுக்கப்பட்ட காணிகளுக்கும் எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன. செய்கை செய்யப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு நான் கூறினேன். புரியவில்லையா என எனக்குத் தெரியவில்லை. காடழிப்பிற்கு எவருக்கும் இடமளிக்கப்படவில்லை. காடழிப்பு இடம்பெற்றால் அதிகாரிகள் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். கூறப்பட்டுள்ள விடயம் அதுவல்ல. பொய் பிரசாரம் செய்து இவ்வாறான வேலைத்திட்டங்களைக் குழப்புவதற்கு சமூக வலைத்தளங்களும் தயாராகவுள்ளன.