சில்லறை விலை சிகரட் விற்பனையை தடை செய்யத் திட்டம் 

சில்லறை விலையில் சிகரட்கள் விற்கப்படுவதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம்

by Staff Writer 20-02-2021 | 2:48 PM
Colombo (News 1st) சில்லறை விலையில் சிகரட்கள் விற்கப்படுவதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், 160 மில்லிலிட்டர் மதுபான போத்தல் விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பிலும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேவைப்படும் சட்ட திட்டங்கள் தற்போது தயாரிக்கப்படுவதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சில்லறை விலைக்கு சிகரட்களை பெறுவோரின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்வதை கருத்திற்கொண்டு, சில்லறை விலைக்கு சிகரட்களை விற்ப​னை செய்வதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர் சமாதி ராஜபக்ஸ கூறியுள்ளார். சிகரட் பக்கெட் ஒன்றில் குறைந்தது 20 சிகரட்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனூடாக, சிகரட் பாவனையாளர் ஒருவர் சில்லறை விலைக்கு சிகரட்டை கொள்வனவு செய்ய முடியாமல் போகும் என்பதுடன், 20 சிகரட்களை ஒன்றாகக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, இதற்காக செலவிடப்படும் தொகை அதிகம் என்பதால், சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கையை இயலுமானவரை குறைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமென பேராசிரியர் சமாதி ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சிகரட் பாவனையினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மதுபான பாவனையினால் நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.