சஹ்ரானின் ஆயுதப் பயிற்சியில் கலந்துகொண்டவர் கைது

சஹ்ரானின் ஆயுதப் பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட பெண் கைது

by Staff Writer 20-02-2021 | 3:12 PM
Colombo (News 1st) சஹ்ரானின் அடிப்படைவாத ஆயுதப் பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனல்லையை சேர்ந்த 24 வயதான பெண்ணொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான், பெண்கள் சிலரை பயிற்சிகளில் ஈடுபடுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் 6 பேர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அடிப்படைவாத ஆயுதப் பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட மற்றுமொரு பெண், நேற்று (19) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். குறித்த பெண்ணை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.