பொலிஸார் மீதான முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை

பொலிஸார் மீதான அநாமதேய முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

by Staff Writer 19-02-2021 | 4:14 PM
Colombo (News 1st) பொலிஸ் உத்தியோகத்தர்களின் துர்நடத்தை, கடமை தவறுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிடைத்துள்ள அநாமதேய முறைப்பாடுகள் குறித்து புலனாய்வு பிரிவினரூடாக தகவல்களை திரட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார். அநாமதேய முறைப்பாடுகள் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்ந்து தவறு செய்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த விசாரணைகள் குறித்து பிராந்தியங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தகவல்கள் பதிவு செய்யப்படாமையால், அது குறித்த விசாரணைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் போது, விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களையும் இணைக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, போலி முறைப்பாடுகளை முன்வைப்போருக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.