by Staff Writer 19-02-2021 | 6:46 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கூட்டம் சம்பள நிர்ணய சபையில் இன்று நடைபெற்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம், சம்பள நிர்ணய சபையின் உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவரும் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும், எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் கலந்துரையாடல் நிறைவடைந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவர் மாத்திரமே வருகை தந்ததால், பேச்சுவார்த்தையை காலம் கடத்த வேண்டிய தேவை சம்பள நிர்ணய சபைக்கு ஏற்பட்டதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.
சகல அதிகாரங்கள் கொண்ட அரசாங்கத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் எனவும் கிட்ணன் செல்வராஜா கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்திற்கு கூட கம்பனிகள் பயப்படாத நிலையில், தொழிற்சங்கவாதிகள் என்ற ரீதியில் மிகவும் கவலையடைவதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க உறுப்பினர் எஸ்.முத்துக்குமார் கூறினார்.