காரைநகரில் முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீடு மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

by Staff Writer 19-02-2021 | 6:30 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - காரைநகரில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீடு மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் தென்மேற்கு J-45 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 50 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியை அளப்பதற்காக நில அளவை திணைக்களத்தினர் இன்று அங்கு சென்றிருந்தனர். இலங்கை கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பிற்கான அளவீடு செய்யப்படவுள்ளதாக, அரச நில அளவையாளர் சி.ஶ்ரீதுர்க்கானந்தன் எழுத்து மூலம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கமைய, நில அளவைக்காக உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தபோது அரசியல்வாதிகளும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறித்த பகுதியில் தாம் மீளக்குடியேறி, தமது மீன்பிடி ஜீவனோபாயத்தை முன்னெடுக்க விரும்புவதாக மக்கள் தெரிவித்தனர். நில அளவீட்டிற்கு அரசியல்வாதிகளும் மக்களும் கடும் எதிர்ப்பு வௌியிட்டதால், அப்பணி கைவிடப்பட்டது.