ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை, தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழு அறிக்கையை ஆராய குழு நியமனம்

by Staff Writer 19-02-2021 | 7:43 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் அறிக்கையினை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைகளில் காணப்படும் விடயங்களையும் சிபாரிசுகளையும் ஆழமாக ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஸ குறித்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். அவ்விரு அறிக்கைகளும் ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் குழுவிற்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குழு இது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிடவுள்ளது.