மன்னாரில் காணாமற்போன மீனவர்கள் இருவரின் சடலங்கள் மாலைத்தீவில் கரையொதுங்கின

by Staff Writer 18-02-2021 | 4:59 PM
Colombo (News 1st) மன்னார் - தாழ்வுபாட்டிற்கு அருகில், கொன்னயன் குடியிருப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது காணாமற்போன மூன்று பேரில் இருவரின் சடலங்கள் மாலைத்தீவில் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மற்றுமொருவர் சுகயீனமுற்ற நிலையில் மாலைத்தீவிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர் சந்திரசேகரம்பிள்ளை பவாநிதி தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் கிடைக்காத நிலையில், உறவினர்களூடாக தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். தாழ்வுபாட்டிற்கு அருகில் தூண்டில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவரும் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் 31 ஆம் திகதி உறுவினர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர் சந்திரசேகரம்பிள்ளை பவாநிதி குறிப்பிட்டார். அதற்கமைய, காணாமற்போன மூன்று பேரில் ஒருவர் சுகயீனமடைந்து மாலைத்தீவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை நேற்று (17) தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 51 வயதான கண்ணன் என்றழைக்கப்படும் அன்டன் சிவதாஸ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 31 வயதான கொட்விட் என்றழைக்கப்படும் சாந்தன் செபஸ்டியான்பிள்ளை மற்றும் 22 வயதான செல்வராசா ஜெயராம் ஆகியோரின் சடலங்களே மாலைத்தீவில் கரையொதுங்கியுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக திசையறியாது இவர்கள் மூவரும் தத்தளித்துள்ளனர். இந்நிலையில், எரிபொருள் நிரப்பும் ப்ளாஸ்டிக் பீப்பாயுடன் கடலில் குதித்ததாகவும், மற்றையவர் உணவின்றி உயிரிழந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் அலுவலகர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.