கிராம உத்தியோகத்தர் கொலை:சந்தேகநபர் விளக்கமறியலில்

மன்னாரில் கிராம உத்தியோகத்தர் கொலை: சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 17-02-2021 | 4:40 PM
Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், மேலதிக விசாரணை அறிக்கையும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் மருத்துவ ஆய்வறிக்கையும் தடயப் பொருட்கள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என இன்றும் சுட்டிக்காட்டப்பட்டது. விரைவாக மன்றிற்கு அவற்றை சமர்ப்பிப்பதற்கான நினைவூட்டுகையை அனுப்புமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜயேந்திரன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.