by Staff Writer 16-02-2021 | 4:39 PM
Colombo (News 1st) நுகேகொடை - கங்கொடவில பகுதியில் 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு பிரிவினரால் இன்று பிற்பகல் 1.30 அளவில் நுகேகொடையில் அமைந்துள்ள விருந்தினர் இல்லமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த விருந்தினர் இல்லத்தின் 29 வயதான முகாமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கைதான முகாமையாளரிடம் கொழும்பு திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான உத்தரவைப் பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.